Saturday 25 October 2014

தாழிடப்பட்ட கதவுகள்

ஒற்றை சொற்களாய் உதிர்த்து
வானத்தை நிரப்பிய பின்,

உன்
துயரம் தோய்ந்த நாக்கு
என் தனிமையை தின்னத்தொடங்குகிறது.

இரவின் நீட்சியும்
வியர்வை நாற்றமும்
பிசுபிசுப்பின் அந்தரிப்பும்
மோகனத் தவம் கலைக்காமல்
சாய்ந்தெழும் பெருமூச்சும்
அவசத்துடன் பகிரப்படுகையில்


யாருக்கும் கேளாமல்
நீ சிந்திய ஓலமொன்று
நட்சத்திரங்களை விழுத்தியது.

நிராகரிக்கமுடியாத முத்தத்தை
அவமானத்துடனும்,
கண்ணீருடனும்
அருவருப்புடனும் எதிர்கொள்ளும் அபத்தப் பொழுதொன்று
நினைவுகளில் விரிகையில்,
சொற்கள் வறண்டு ஆவியாகிப் போக,

கதவுகள் மூடிய
கண்ணீர்வளையத்தின் மறைவில்
என்னைத் துகிலுரியத்  தொடங்குகிறேன்
உனக்குப் பரிசளிக்க.

வானத்தை நிரப்பிய உன் சொற்கள்
என் தனிமையை தின்று
நட்சத்திரங்களாய் பூக்கின்றன

1 comment:


  1. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete