Sunday 17 March 2013

பகிரப்படாத அல்லது பகிரமுடியாத .............!!

யாரும் வசிக்காத அல்லது
வசிக்க விரும்பாத அந்தவீட்டின்
அமைதி கொடியது !
மிக மிக வலிமையானது !!

ஓட்டிடைகளில் எலிகளோ,
யன்னல் இடுக்குகளில் பல்லிகளோ,
இல்லாத அந்தவீட்டின் அமைதி
மயானத்தை நினைவூட்டிக்கொண்டிருந்தது.

கதவுகளில் சிலந்திவலைகளும்
சாவித்துவாரங்களில் மண்கூடுகளும்
கைபிடிகளில் கறல்களும்
சருகுகளுள் மறைந்து கிடந்த மிதியடியும்
சூழ்ந்திருந்த அமைதியை
கோரமாக்கிகொண்டிருந்தன.

கண்ணாடியில்
ஒட்டியிருந்த பொட்டும்
சீப்பில் சிக்கியிருந்த முடிகளும்
அடுப்பின் ஓரத்தில்,
காய்ந்துகிடந்த எண்ணைச்சட்டியும்
வெள்ளைகரித்துனியும்
விளக்கமுடியாத அந்தரத்தை விதைத்தது.
மனதுள் ஊசலாடியது மங்கலாக
ஒரு உருவம்.

அழகியசாமிப்படங்கள்
அபூர்வ சங்கு,மக்கிபோன ஊதுபத்தி
அலங்கரிக்கப்பட்ட அறை
மிக மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது!!

ஒன்றுமட்டும்
இறுதிவரை புரியவேயில்லை,
எதற்காக சாமிஅறையை தேர்ந்தெடுத்தாள்,
தற்கொலைக்கு !!!

யன்னலால் தெரிந்த மாமரத்தின்
உச்சாணிக்கிளையில்
கூச்சலிட்டுக்கொண்டிருந்தது
அணிலொன்று தனியாக

2 comments:

  1. ம்ம்... யாரும் பகிர்ந்து கொள்ள முடியாத.....
    தனிமையின் அந்தரத்தை அந்த வீடும் கூட அனுபவிக்கிறது...
    இல்லாமல் போனவளின் இதய அரங்கமான வீட்டில்.. பாலிகளோ எலிகளோ கூட எட்டிப் பார்க்காத தனிமை.. :(

    ReplyDelete
  2. அருமை .. தனிமை கொடுமை..த.ம 2

    ReplyDelete