Wednesday 20 February 2013

பிரசவிப்பொன்றை நிகழ்த்துவோம்....

குருதியோடிச் சேறாகி
வறண்டுபோய்
வெடித்துக் கிடக்கிறது
எங்களின் நிலம்,

முளைகருகிச் சருகாகி
புல்பூண்டுகளும்,
மக்கி மண்னேறி மண்டையோடுகளும்
இன்னபிற அவயத்துண்டுகளும்
கறைபடிந்த துணிகளும்
ஆங்காங்கே சிதைந்து கிடக்கின்றன,

ஆந்தைகளும்
ஆட்காட்டிகுருவிகளும் கூட
இடம்தேடி
எங்கோ போய்விட்டன,

கடந்தவைகளை  மறந்து
அடங்கிக்கொண்டிருக்கிறது தேசம்.
தழுவல்களும்
கண்ணீரும்
ஒப்பாரிகளும்-என்
சிறுதேசத்தில் மாற்றங்களை
நிகழ்த்த முயன்று தோற்றுப்போகின்றன,

இழவு முடிந்த
எங்களின் வீட்டு
சுவர்களிலும் தூண்களிலும்
தங்களின் கழிவுகளை கொட்டிவிடும்
வன்மத்தோடுதான்
வாசல்களில் மேடை போடுகிறார்கள்
கௌதம புத்தரின் வழிப்பிள்ளைகள்.

அவர்களுக்காக,
சாம்பல் மேடுகள்மீது
செங்கம்பளம் விரித்து சாமரையோடு
காத்திருக்கிறார்கள்
உணர்ச்சிகளை தட்டி வாக்கு வாங்கியவர்கள்.

மழைக்காலத்தின் பூசிகளாய்
எழுந்தோய்கிறது
மனிதஉரிமை பேச்சுக்களும்
காணொளிகளும்,
வலிகளை சுமத்தி தங்கள் வசதிகளை
நிர்ணயப்படுத்திக்கொள்கிறார்கள்
வல்லூறுகளின் சிறகுகளில்
ஒளிந்துகொண்டவர்கள்.

வலி பொறுத்திருக்கும்
இந்த காலத்தில் கூடி
ஒரு கருக்கொள்ளுவோம்!!
உருக்குலைந்த உறவுகளின்
உணர்வுகளை உணவாக்கி
கரு வளர்ப்போம் !!

நாளைய பொழுதொன்றில்,
குருதியோடி
வறண்டு வெடித்த அந்த நிலத்தில்
மீள் பிரசவிப்பொன்றை நிகழ்த்துவோம்!
தேசத்தின் சுவர்களை கட்டியமைப்போம் !!

3 comments:

  1. என்ன சொல்வது கவிதை மனதை குடைகின்றது மீளவும் சுவர்களை கட்டி எழுப்புவோம் என்பது எதன் அர்த்தம் கொஞ்சம் குழப்பம் தான். எனக்கு ம்ம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ் நன்றி வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்,
      சுவர்களை கட்டியமைப்போம் /////////////எமக்கான வேலிகள் எங்களால் மட்டுமே உருவாக்கப்பட முடியும்.எங்களை காத்துக்கொள்ள வேலிகள் அவசியமாகின்றன நிகழ்வுகள் அதை ஆழமாக சொல்லுகின்றன..........இதுவே யதார்த்தம்.

      Delete
  2. வருத்தமாய் உள்ளது.கவிதை ன்று

    ReplyDelete