அதிஉச்ச காத்திருப்பொன்றை
வழங்கிவிட்டிருந்தது
காலம்,இந்த காதலின் மீது !
எத்தனை மழைப்பொழுதுகள்
கடந்தனவென்று நினைவிலில்லை!
பார்வைகளாலும் சிரிப்புக்களாலும்
சின்னதலையசைப்புக்களாலும்
பகல்கள் கடந்தன ................
அவற்றின் மீதான நினைவுகளால்
இரவுகள் இறந்தன ............
நிழல்தந்த ஆலமரம்
நிறையதடவை இலையுருத்தி
துளிர்த்து நின்றது !!
பகிர்தலுக்கான காத்திருப்பின்
கணங்களில் நிகழும்
பதற்றத்தை,தயக்கத்தை
தளம்பல்களை,புலம்பல்களை
புரிந்துகொள்ளாமல்
யாராவது வந்துவிடுவார்கள் அல்லது
மிக மிக தாமதமாய் நீ வருவாய் ............
ஊரடங்கு குண்டுவெடிப்பு
சுற்றிவளைப்பு தலையாட்டல்
என்றெல்லாம் அந்தரித்த காலத்திலும்
பின்னான பேச்சுகாலங்களிலும்
பேசுதல் என்பதுதாண்டி சஞ்சரித்திருந்தது நேசிப்பு.
உலவியொன்றின் மையப்புள்ளியை
சுற்றிவந்தோம் விலகாமலும் நெருங்காமலும்
என்மீதான உனது கரிசனைகள்
மிக மிக அதிகரித்திருந்தன
கனிந்த பழமொன்று காம்பினை இழக்கப்போகும்
கணங்களை ஒத்திருந்தன ..........
காலநீட்சியின் வியூகங்கள் வியாபிக்க......
உடைப்பதற்கான சாத்தியங்கள் இருந்தும்,
சாத்தியங்கள் பற்றி யோசிக்கதொடங்கிய
கணமொன்றில் தற்கொலை செய்துகொண்டது
பகிர்தல், இருவருக்குமிடையில் ...........................
அதிஉச்ச காத்திருப்பொன்றை
வழங்கிவிட்டமைக்காக
நிராதரவான காலமும் அன்பும்
பயணிக்கதொடங்கின
இணைந்து .................................!!