Saturday 30 June 2012

அர்த்தமிழந்து போன அர்த்தங்கள்


நிலாக்கரையும் பொழுதொன்றில்
உலர்ந்த உதடுபிரித்து
பேசத்தொடங்கினேன்
ஒலிக்குறிப்பற்ற சொற்களால்.
நிசப்தமுடைக்கும்
மிக நிசப்தமாய்
மிதக்கத்தொடங்கின அர்த்தங்கள் .

இலையில் பின்னிய வலைக்குள்
இறந்துபோன புழுவாய்
உக்கத்தொடங்கியது மனம் !

இடைவெளிகளை
முரண்களால் நிரப்பி
இணைப்புக்களை தயக்கங்களால்
சோடித்துத்திரும்பியபோது,
வறண்டு வெடித்துப்போயிருந்த
மனதேசத்தில் விழுந்த கண்ணீர் துளிகள்
விதைகளை எரித்து கருக்கின ..........

மரண ஊர்வலம் போன
பாதையில் நிலைத்திருக்கும் வாசம்போல்
படர்ந்திருக்கிறது உள்ளுக்குள்
காயத்தின் ஊனநீர் நாற்றம்

ஒடுங்கி
ஒன்றுமில்லாத ஒன்றாக
மீண்டும் மீண்டும்
ஒடுங்கி கொள்கிறது
இந்த நாட்கள் மீதான இருப்பு

மெல்ல மெல்ல
கரைந்து மறைகிறது நிலவு

அர்த்தங்கள் எல்லோராலும்
பகிரப்படுகின்றன பெருமூச்சுக்களாக
அவளிடமிருந்தும் ........................!!!



No comments:

Post a Comment