Wednesday 23 May 2012

த(ய)ங்கிய வேர்கள் ..........



ஒற்றைப்பனை,
வஞ்சகமில்லா நெடுவளர்த்தி
காற்றுக்கு காவோலை கழண்டால்
மாற்றமில்லாமல் தாண்டும் நூறடி !

ஆடுமாட்டமும் கரியவுருவமுமாக
மின்னலொளியில் பார்த்தால் ,
மயிர்கூச்செறியும் மழையிரவுகளில்
அதிகாலை அப்பாவியாய் நிற்கும் ,

கூடுவிழுந்து காகம் போனபின்னே
வீடாக்கி கொண்டது அணிலொன்று வட்டை !

கறையான் தின்ன இறங்கிவரும் அணிலை ,
இரையாக்க காத்திருக்கும் கடுவன்பூனை
வெள்ளைதான் ,மனசெல்லாம் கள்ளமதுக்கு ,
காத்திருப்பும் தப்பித்தலுமாக
அணிலும் பூனையும் கொஞ்ச காலம் ...............

பாணியதிகம் பழத்தில்,
அணிலோ பருவத்தில் கோதிவிடும் _அம்மாவின்
ஏச்சு சிலவேளை அணிலுக்கும் விழும்!
பாணியெடுத்து பனாட்டு போடுவதைவிட
பணியாரம் சுடுவதை வழக்கமாக்கியிருந்தாள்!
கொக்காரை பன்னாடையென்று
எதுவிழுந்தாலும் தொட அனுமதிப்பதில்லை
புருனைசிலந்தியிருக்கும் என்று சொல்லி ,
தட்டிதானெடுத்து வைப்பா !

மாடு முதுகுதேய்க்கவும்_சிலகாலத்தில்
கொடிகட்டி புகையிலை போடவும் ,
எப்பவாவது சாய்ந்துகொள்ளவும்,_அவதிக்கு
அப்பாடா என்றுஒன்னுக்கு அடிக்கவும்
போனதைதவிர பலவேளைகளில்
ஒற்றையாகவே .............!

இப்போதெல்லாம் நினைவில்
தினமும் வந்துதொலைக்கிறது
அந்த ஒற்றைப்பனைமரம் .............

ஓ வென்று அழவேண்டும் போலிருக்கிறது ,
இந்த தனிமையை எண்ணி !!!




2 comments:

  1. mmmmm அருமையான பகிர்வு.... பகிர்வுக்கு நன்றி..சகோ

    ReplyDelete
  2. நன்றி சிட்டுக்குருவி தங்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete